Wednesday, March 3, 2010

93. குருசினில் தொங்கியே

குருசினில் தொங்கியே, குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி
கொள்ளாய் கண் கொண்டு.

1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ! - தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ - குருசினில்

2.பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க - யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை - குருசினில்

3.சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ? - குருசினில்

4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே - அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது! பார்; - குருசினில்

5.எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? - நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ? - குருசினில்
Save Page As PDF

No comments: